அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பில் கருத்துரைக்கையில் நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அண்மைய நாட்களில் எரிவாயு, அரிசி, சீனி, பால்மா மற்றும் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பால் மா மற்றும் சீமெந்து தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த இரண்டு பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினார்.
Post a Comment