பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுறுதிப்படுத்தினார்.
இதற்கமைய 2003ஆம் ஆண்டு 09ஆம் இலக்கப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டம் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருகிறது.
வர்த்தக அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021 ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
இந்தத் (திருத்தச்) சட்டமூலம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு உச்சபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தில் விலை நிர்ணய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் இதுவரை இருந்து வந்த தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அதன் பிரகாரம் 10 ஆயிரம் ரூபாவாக இருந்தத் தொகை ஒரு இலட்சம் ரூபா வரையும் ஒரு இலட்சம் ரூபா 10 இலட்சம் ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டிருகின்றது. இந்த தொகை 20 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமையில் ஒருசில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை பாரியளவில் அதிகரித்து விற்பனை செய்துவருகின்றனர்.
இவ்வாறான வியாபாரிகளுக்கு தண்டப்பணமாக இருக்கும் தொகை மோதுமானதாக இல்லை. அதனால் அவர்கள் தொடர்ந்து அந்த குற்றத்தை செய்துவருபவர்களாக இருந்தனர்.
அதனால் இதனை தடுத்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலே தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். நாடில் 90வீதமானவர்கள் நல்லவர்கள் என்றாலும் 10 வீதமானவர்களின் மோசமான நடவடிக்கை காரணமாகவே இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தோம்.
மேலும் நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அந்த பொருட்களுக்கு விலை அதிகரிக்குமாறு கோரி வருகின்றனர். உலக சந்தையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே அவர்களும் விலை அதிகரிப்பை கோருகின்றனர்.
அதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாளைய தினம் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
மேலும் நுகர்வோர் அதிகாரசபையில் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்திருப்பது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அவரும் சில குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு நாங்கள் சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றோம். அதில் சில விடயங்கள் நாட்டுக்கு பாதிப்பு என தெரிவித்திருக்கின்றார்.
நாட்டுக்கு பாதிப்பான எந்த நிபந்தனையும் இல்லை. அத்துடன் அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் எந்தவகையான அழுத்தங்களையும் அவருக்கு பிரயோகிக்கவில்லை என்றார்.
Post a Comment