நாட்டை முழுமையாக மூடுமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்தால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்கவே அனைத்து தீர்மானங்களையும் எடுக்கிறதென தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நாட்டை முழுமையாக மூட வேண்டுமென்ற பரிந்துரையை இதுவரை மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பரிந்துரைகள் கிடைத்தால் அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு செயற்படுகிறது. கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி செயற்படுகிறது. அதேபோன்று அதனோடு இணைந்த பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் செயற்பட்டு வருகின்றன. நாம் எமக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
எனினும் சில அரசியல் சக்திகளின் கைக்கூலிகளாக செயற்படும் நபர்களும் உள்ளனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவர்களது தேவையாக உள்ளது.
Post a Comment