இன்று முதல் 70 தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக, இந்த தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பிரதான மார்க்கத்தில் அம்பேபுஸ்ஸயில் இருந்து 11 தொடருந்துகளும், கரையோர மார்க்கத்தில், அளுத்கம மற்றும் களுத்துறையில் இருந்து 12 தொடருந்துகளும் காலை வேளையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
சிலாபம் மார்க்கத்தில், கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பில் இருந்து 6 தொடருந்துகளும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளை மற்றும் பாதுக்கையில் இருந்து 5 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதற்கமைய, சுமார் 35 தொடருந்துகள், காலையும் மாலையும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம், இன்றைய தினம் மாவட்டங்களுக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்காக, தேவைக்கேற்றவாறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வாரத்தை விடவும் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற மாட்டாது என்றும், அதற்கான அனுமதி தங்களுக்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், தேவைக்கு ஏற்றவாறு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகளை இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்துவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment