இந்த அரசாங்கமானது உயர் வர்க்கத்தினருக்கு நிவாரணங்களை வழங்கியதோடு, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பட்டினியைக் கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்துக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2019ஆம் அண்டு அந்நிய செலாவணி 700 கோடி டொலர்களாக காணப்பட்டதாகவும், தற்போது அது 400 கோடி டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனைக் கட்டியெழுப்ப 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுமென அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்கு தான் உடன்படுவதாகவும், ஆனாலும் இது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்வொன்றை முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
தற்போது நாட்டில் உரம், எரிபொருள், கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இலங்கையிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் வகுத்த திட்டங்கள் யாவை? கொரோனா வைரஸ் பரவல் செயலணியை மட்டுமே உருவாக்கி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நினைத்தது. ஆனால் அந்த செயலணியின் செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் அமைச்சரவைக்கு அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
உலக சுகாதார அமைப்புடன் தொடர்புடைய எந்தவொரு குழுக்களும் இலங்கையில் இல்லை. அவ்வாறு இருக்கும் கொவிட் செயலணியின் தலைமைத்துவத்தை இராணுவ பிரதானியிடம் இந்த அரசு ஒப்படைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு படை பிரதானிக்கு கொவிட் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் எவ்வாறு சிறப்பாக செயற்பட முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் அவையில் குறிப்பிட்டார்.
அத்தோடு, அனைத்து ஜனநாயக நாடுகளில் மூவகையான அதிகாரப் பிரிவுகள் உள்ளன. அரசியல் அதிகாரம், சிவில் அதிகாரம் மற்றும் முப்படை அதிகாரம் இவற்றில் முப்படையினரின் அதிகாரமானது யுத்தத்திற்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இலங்கையில் அது தலைகீழாக மாறி நாட்டின் ஆட்சியில் முப்படையினர் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும் ரணில் எம்.பி தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் உரையாற்றி இருந்தார், இவருக்கு அடுத்ததாக நிதியமைச்சின் செயலாளரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ உரையாற்றி இருக்கலாம். ஆனால் இங்கு இராணுவத்தளபதி உரையாற்றுகிறார். இது என்னவென்று தனக்கு புரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தனக்கு இராணுவத்தளபதியுடன் எந்தவொரு தனி குரோதங்களும் இல்லையெனவும் தனக்கு அவர் உதவியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரணில் எம்.பி, நாட்டின் ஆட்சியில் இராணுவத்தினர் உள்நுழைந்து செயற்படுவது தவறு என்பதையே சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது, நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வதற்காக அல்லவெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment