நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 711 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 416 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 840 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 194 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வல்கம்முல்ல, தேவாலபொல, நீர்கொழும்பு மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment