இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது உரையை அரசாங்கம் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இரு நாட்கள் தங்கியிருப்பார் என்பதோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கானின் உரையினை திடீரென இரத்து செய்தமை சிறுபான்மை மக்கள் இடையே பெரும் கேள்விக்குறியாக உள்ளது எனலாம். இந்நாட்களில் பரவலாக பேசப்படும் ஒரு பேச்சுபொருளாக கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதி வாதங்கள் எழுந்து வருகின்ற நிலையில், கடந்த பாராளுமன்ற அமர்வொன்றில் பிரதமர் அதற்கு தான் அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியினை தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற இடமளித்துள்ளமை தொடர்பில் இந்தியா இராஜதந்திர மட்டத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கொரோனாவினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் சர்ச்சையாக இருப்பதால், பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment