கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி வசிப்பிடத்தை உறுதிப்படுத்த முடியாத 62 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 377 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய நாளில் மாத்திரம் தொற்றுக்குள்ளான 703 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 466 பேர் மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 237 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 25 ஆக காணப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 344 பேர் நேற்று குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 634 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 491 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்து 17 ஆயிரத்து 741 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment