திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித மாளிகாவத்தை பகுதியில் காவற்துறை மற்றும் பாதாளகுழுவினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தையில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கிய நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்து சென்ற போது பாதாள குழு உறுப்பினர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு காவற்துறை கான்ஸ்டபிள்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மாக்கந்துரே மதூஷ் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோகிராம் ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய உந்துருளி என்பனவும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டன.
பாதாள உலககுழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தற்காரருமான மாக்கந்துரே மதூஷ், கடந்த ஆண்டு பெப்ரவரிமாதம் டுபாயில் கைதுசெய்யப்பட்டார்.
அங்கு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து அவரும் அவருடன் மேலும் 25 பேர் வரையிலும் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவராக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment