கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடியுள்ளார்.
இத்தாலியின் ப்ரேஸியா பகுதியில் வசித்து வரும் 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்த பெண் கடந்த 10 வருடங்களாக தனது கணவருடன் இத்தாலியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2036 ஆக காணப்படுகின்றதுடன் 52 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் தொற்று குறித்து பேசும் காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அவர் சகோதர மொழியில் தெரிவித்த விடயங்கள்...
எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை சென்று சிகிச்சைப் பெற முயற்சித்தேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை வைத்தியர்கள் அறிவித்தனர். இத்தாலி நாட்டிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தார்கள். அவர்களிடமிருந்து தனக்கும் தொற்றியதாக தனக்கு அறியக் கிடைத்தது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்த பெண் பிரிதொரு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். தன்னை பார்வையிடுவதற்கு எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 46 வயதுடைய இலங்கைப் பெண் சற்று முன்னர் இலங்கை அதிகாரியொருவர் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் குறித்த பெண் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கையிலிருந்து உரையாற்றிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டுமென்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர் என்றும், ஆகையினால் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் உரையாடிய இலங்கை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment